சென்னையில் திடீரென கொட்டிய மழை.. அடிச்ச வெயிலுக்கு.. இப்போதான் ஜில்லுன்னு இருக்கு!
சென்னை: இன்று காலை முதல் சென்னையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்நிலையில் தற்போது திடீரென மழை கொட்டியுள்ளது. இதானால் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் வட மாவட்டங்களில் திடீரென மழைய பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு மிதமான மழை பெய்துள்ளது. புறநகர் சென்னையான கோயம்பேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், பாடி, கொளத்தூர், அயனாவரத்தில் மழை பெய்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அன்று தொடங்கி இன்று வரை 321.6 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது இயல்பான மழையை விட 4% கூடுதலாகும். மாவட்ட வாரியாக பார்த்தால் அரியலூரில் 11%, சென்னையில் 34%, கோயம்புத்தூரில் 39%, கடலூரில் 19% , மயிலாடுதுறையில் 87%, நீலகிரியில் 14%, ராணிப்பேட்டையில் 51%, தென்காசியில் 56%, திருநெல்வேலியில் 259%, திருவள்ளூரில் 37%, திருவண்ணாமலையில் 13%? திருவாரூரில் 15%, வேலூரில் 42%, விழுப்புரத்தில் 21%, அளவுக்கு கூடுதலாக மழை பெய்திருக்கிறது.
அதேபோல விருதுநகரில் 42%, திருச்சியில் 21%, தூத்துக்குடி 58%, திருப்பூரில் 56%, சேலத்தில் 13%, ராமநாதபுரத்தில் 44%, நாமக்கல்லில் 28%, நாகப்பட்டினத்தில் 18%, மதுரையில் 19%, கிருஷ்ணகிரியில் 13%, கரூரில் 30%, ஈரோட்டில் 22%, திண்டுக்கல்லில் 37%, தர்மபுரியில் 19%, என மழை இயல்பை விட குறைவாகப் பெய்து இருக்கிறது.
முன்னதாக இன்று மதியம் விடுக்கப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், "நேற்று (25-09-2025) காலை மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, மாலை 1730 மணி அளவில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியது.
இது மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (26-09-2025) காலை, 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற 27-ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
செப்.28 முதல் அக்.2 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
இன்று தொடங்கி செப்.30 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இந்த தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (26-09-2025): வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (27-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications