சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது!
சென்னை: சென்னையில் கோடை வெயில் கொப்பளித்து வரும் நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. வானம் கும்மிருட்டாகி பலத்த காற்று வீசி வருகிறது. கிட்டத்தட்ட அரை மணி நேரமாக இந்த மழை பெய்கிறது.
ராயலசீமா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மன்னார் வளைகுடா வரை தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை சேர்ந்த பகுதிகளில் இன்று லேசானது அல்லது மிதமான மலைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ராயலசீமா, அதையொட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தென்தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை 3 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் காலை முதலே வெயில் இல்லாமல் இதமான சூழல் இருந்தது. தற்போது கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு இடியுடன் காற்று வீசுகிறது. இத்தனை நாட்களாக கோடை வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு தற்போது இந்த குளுகுளு மழை இதமாக உள்ளது.
மயிலாப்பூர், மந்தைவெளி, அடையார், ஆர்ஏ புரம், பட்டினம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், அசோக்நகர், நுங்கம்பாக்கம், போரூர், ஈக்காட்டுத்தாங்கல், மேற்கு மாம்பலம், திருமுல்லைவாயில், பூந்தமல்லி, வில்லிவாக்கம் திருவேற்காடு, தாம்பரம், முகப்பேர், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது: திருப்பதி அருகே மையம் கொண்ட மேகக் கூட்டங்கள் தடா எல்லையை நெருங்கியது. இதனால் சென்னையில் மழை பெய்யும். திருப்பதியில் உருவான இந்த இடியுடன் கூடிய மழை மேகங்கள், எதிர்பார்த்தத்தை விட நீண்ட நேரம் வலிமையாக இருக்கின்றன.
பொதுவாக காலை நேரத்து ஈரப்பதம், வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இவை மெதுவாகத் தெற்கு நோக்கி நகர்ந்து வருகின்றன என தெரிவித்துள்ளார். இன்னொரு பதிவில் வரலாம் வரலாம் வா. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications