கொளுத்தப்போகும் வெயில்.. 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும்! உஷார் மக்களே
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஒரு சில இடங்களில் வெயில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் நிலவரத்தை பொறுத்தவரை, தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கோவில்பட்டி (தூத்துக்குடி) 3 செ.மீ, இளையாங்குடி (சிவகங்கை) 2செ.மீ, கமுதி ARG (ராமநாதபுரம்) 1செ.மீ என மழை பதவாகியுள்ளது.

வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 40.2° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 23.0° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-40° செல்சியஸ், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் 34-36° செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-38° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 21-28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த 7 தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது எனவே, 21 மற்றும் 22-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23-04-2025 முதல் 27-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, 21-04-2025 முதல் 25-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப வேறுபாடு:
21-04-2025 முதல் 25-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
21-04-2025 முதல் 25-04-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு:
இன்று (21-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (22-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள் 21-04-2025 முதல் 25-04-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications