அனல் பறக்கப் போகும் அடுத்த 10 நாட்கள்.. வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களுக்கு வெயில் வாட்டி வதையுக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இன்று வேலூர், திருத்தணியில் வெயில் 40, 39 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியிருக்கும் என்று கூறியுள்ள அவர் உள் மாவட்டங்களில் வெயில் தீவிரமடையும் என்றும் கூறியுள்ளார்.

அதாவது, "இனி வரும் நாட்களில் ஈரோடு, சேலம், நாமக்கல் பகுதியில் வெப்பநிலை 39°C இருக்கலாம். குறிப்பாக கரூரில் 40°C வரை வெப்பநிலை உயரும். மதுரையில் 39°C, திருச்சியில் 38°C முதல் 39°C வரை வெயில் இருக்கும். அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இனி வெயில் வாட்டி எடுக்கும்.
உள்மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போது மழை மேகங்கள் நாமக்கல் மாவட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.
சென்னையை பொறுத்தவரை, அம்பத்தூர், ஆவடி என உள்பகுதியில் வெயில் 39 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். மயிலாப்பூர், சைதாப்பேட்டை பகுதிகளில் 37 முதல் 38 டிகிரி வரை வெயில் பதிவாகும். குறிப்பாக நாளையும் நாளை மறுநாளும் வெயில் அதிகரிக்கும்" என தனது x பக்கத்தில் வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், "கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை நிலவரத்தை பொறுத்த அளவில், அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 39.4° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 22.5° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-39° செல்சியஸ், தமிழக கடலோரப் பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-36° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 21-28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த 7 தினங்களுக்கான எச்சரிக்கை
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21-04-2025 முதல் 25-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த அளவில், இன்று முதல் 21-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். 22-04-2025 மற்றும் 23-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து வெப்ப அளவின் வேறுபாடு:
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 20-04-2025 முதல் 23-04-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 19-04-2025 முதல் 21-04-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை
இன்று (19-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (20-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications