திரும்பும் பக்கமெல்லாம் சொத சொதனு மழை! ஆனாலும் இயல்பை விட இது குறைவுதான் - வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், தற்போது கோடை மழை தீவிரமெடுத்திருக்கிறது. இருப்பினும் இது இயல்பை விட 30 சதவிகிதம் குறைவு என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில்தான் கோடை வெயில் தொடங்கும். ஆனால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பிப்ரவரி இறுதியில் வெயில் தொடங்கிவிட்டது. மார்ச்சில் ஏற்றம் கண்ட வெயில், ஏப்ரலில் உச்சத்தை தொட்டது. தமிழகத்தின் பரவலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியிருந்தது.

குறிப்பாக ஈரோடு, கோவை, கரூர் என கொங்கு மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், திருத்தணி என வட மாவட்டங்களில் வெயில் 105 டிகிரிக்கு அதிகமாக பதிவாகியிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது கோடை மழை தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் தென் மாவட்டங்களில் தலையை காட்டிய மழை, கொஞ்சம் கொஞ்சமாக வட மாவட்டங்களை நோக்கி ஏற தொடங்கியது.
100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான பகுதிகளில் மழை புரட்டி எடுத்தது. ஏற்காடு, ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழை தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.
இருப்பினும் இந்த மழை போதுமானதாக இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் 15.5 மி.மீ என்கிற அளவில் மழை பெய்திருக்கிறது. அடுத்தபடியாக சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் 15.3 மி.மீ, கன்னியாகுமரியில் 14.7 மி.மீ, மயிலாடுதுறையில் 10.7 மி.மீ என மழை பெய்திருக்கிறது.
குறைந்தபட்சமாக வேலூர், சிவகங்கை, கரூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை எதுவும் பெய்யவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் சராசரியாக 2.9 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இருப்பினும் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதியிலிருந்து இன்று வரை பெய்ய வேண்டிய கோடை மழையில் 30 சதவிகிதம் குறைவாகவே மழை பெய்திருக்கிறது.
குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை 97 சதவிகிதம் குறைவாக பெய்திருக்கிறது. திண்டுக்கல் இயல்பை விட 38 சதவிகிதம் கூடுதலான மழை பொழிவை பெற்றிருக்கிறது.
முன்னதாக நேற்று வெளியிடப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், 17-18ம் தேதியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
இதே 18-19ம் தேதிகளில் குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications