குளிர்வித்த கோடை மழை.. ஆனா இது பத்தாது! இயல்பை விட 66% குறைவாம்.. வானிலை மையம் ஷாக்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகி வந்த நிலையில், தற்போது கோடை மழை தொடங்கியுள்ளது. இருப்பினும் கோடை மழை இயல்பை விட 66% குறைவாக பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. வட மாவட்டங்களில் சூறை காற்றுடன் கனமழை பெய்திருக்கிறது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கடலூர் போன்ற மாவட்டங்களிலும், திருவாரூர், கும்பகோணம் போன்ற டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்திருக்கிறது. மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழை குறித்து வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று (மே 8) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே மாதம் 10 மற்றும் 11ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த வரையில், 11ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2* செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். அடுத்த 4 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பெய்த கோடை மழை இயல்பைவிட 66% குறைவு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது திண்டுக்கல் மாவட்டத்தை தவிர, மற்ற மாவட்டங்களில் கோடை மழை போதுமான அளவில் பெய்யவில்லை என தெரிவித்திருக்கிறது. குறிப்பாக செங்கல்பட்டு, மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கோடை மழை கடுமையாக குறைந்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல், மே மாதம் 6ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வானிலை தகவல்களை வைத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications