இதென்ன கத்திரியா? இப்படி கொளுத்துது! வெயிலுக்கு நடுவே ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் நேற்று 5 இடங்களில் வெயில் சதம் அடித்திருக்கிறது. இருப்பினும் வரும் 11ம் தேதி 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நேற்றைய தேதியை பொறுத்தவரை, ஈரோடு, பரமத்தி வேலூர், திருபத்தூர், மதுரை விமான நிலையம், நாமக்கல் ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்திருக்கிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 102 டிகிரி பதிவாகியுள்ளது.

அதிக வெயில்:
இன்றைய வானிலை குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. மழை எதுவும் பதிவாகவில்லை. வெயிலை பொறுத்தவரை, கரூர் பரமத்தி, ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் குறைவாக பதிவாகியுள்ளது.
அதேபோல ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 95-102 ஃபாரன்ஹீட் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 87-96 ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
மழைக்கான வாய்ப்பு:
அடுத்த 7 தினங்களை பொறுத்த அளவில், உள்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
10ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
11ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக
கன்னியாகுமரி
திருநெல்வேலி
தென்காசி
தூத்துக்குடி
விருதுநகர்
சிவகங்கை
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12 மற்றும் 13ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பை பொறுத்த அளவில், இன்று முதல் 10 வரை: அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். ஒருசில இடங்களில் 2 -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை வானிலை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்த அளவில், இன்று (08-03-2025): சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் தெளிவாக காணப்படும். அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (09-03-2025): சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் தெளிவாக காணப்படும். அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்றும் நாளையும் எச்சரிக்கை ஏதுமில்லை. 10 மற்றும் 11ம் தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 12ம் தேதி எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்:
இன்றும் நாளையும் எச்சரிக்கை ஏதுமில்லை. 10 மற்றும் 11ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 12ம் தேதி எச்சரிக்கை ஏதுமில்லை. அரபிக்கடல் பகுதிகளில் எச்சரிக்கை ஏதுமில்லை.
எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல எந்தெந்த மாவட்டங்களில் வெயில் குறைந்திருக்கிறது? அதிகமாகியிருக்கிறது என்கிற விவரங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி சென்னையில் நேற்று -2.1ºசெல்சியஸ் முதல் 4.0 செல்சியஸ் வரை வெயில் குறைந்திருக்கிறுது. கரூர் மாவட்டத்தில் 3.1 செல்சியஸ் முதல் 5.0 செல்சியஸ் வரை வெயில் அதிகரித்துள்ளது.
வெயில் நிலவரம் ரவுண்டப்:
இது தவிர சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, திருப்பத்தூர், திருச்சி, வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் 1.6ºசெல்சியஸ் முதல் 3.0° செல்சியஸ் வரை வெயில் அதிகரித்துள்ளது.
வெப்ப மாறுதல்களை பொறுத்த அளவில், திருவள்ளூர் மாவட்டத்தில் 2.1 செல்சியஸ் முதல் 4.0செல்சியஸ் வரை வெயில் அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் -2.1 செல்சியஸ் முதல் -4.0 செல்சியஸ் வரை வெயில் அதிகரித்துள்ளது. கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நீலகிரி (உதகமண்டலம்) மாவட்டங்களில் 1.6 செல்சியஸ் முதல் 3.0 செல்சியஸ் வரை வெயில் குறைந்திருக்கிறது. நீலகிரி (குன்னூர்), சேலம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் -1.6 செல்சியஸ்முதல் 3.0 செல்சியஸ் வரை வெயில் குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தப்பிப்பது எப்படி?:
இனி வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருடன் சேர்த்து எலுமிச்சை சாறு, தர்பூசனி, வெள்ளரி, முலாம்பழம் என நீர்சத்து அதிகம் உள்ள பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது வெளிர் நிற ஆடையை அணிவது சிறந்தது. சூரிய வெப்பத்தை இந்த ஆடைகள் சிதறடித்துவிடும். எனவே அடர் நிறங்களை தவிர்க்க வேண்டும்.
மருத்துவர் அட்வைஸ்:
பெரும்பாலும் வெயில் மதிய நேரத்தில்தான் அதிகமாக இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் வெளியில் செல்லும் பணிகளை தவிர்க்க வேண்டும். காலை அல்லது மாலையில் வெளியில் செல்வது சிறந்தது. அதேபோல, குழந்தைகள், இணை நோய் கொண்டவர்கள், வயதானவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அவர்களின் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உணவிலும் வெயில் நேரத்தில் புரதம் அதிகம் இருக்கும் உணவுக்கு பதில், நார்சத்து அதிகம் இருக்கும் உணவை எடுத்துக்கொள்வது சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications