இனிதான் ஆட்டமே.. நைட்டு வரை.. வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் இப்படி சொல்றாரே! ரொம்ப கவனம்
சென்னை: சென்னையில் இருந்து 110 கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல் வங்க கடலில் நிலை கொண்டுள்ளது என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பலத்த காற்று, மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் 'மிக்ஜாம்' புயல் நகர்ந்து வருவதால் , பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே சுமார் 110 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12- 2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பேட்டி: இந்த புயல் தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் பேட்டி அளித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டு இருக்கும் மிக்ஜாம் புயல் மிக மெதுவாக நகர்ந்து வருகிறது. மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது மிக வேகமாக வலிமை அடைந்து வருகிறது. தற்போது தீவிர புயலாக இது உள்ளது.
இன்று பிற்பகல் அதி தீவிர புயலாக உருவெடுக்கும். அதி தீவிரமாக வலிமை அடைந்து மேலும் தீவிரம் அடையும். கடந்த 6 மணி நேரத்தில் சென்னைக்கு கிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இது தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் .
சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இரவு வரை மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிக கனமழை காற்றோடு பெய்யும். மக்கள் வெளியே செல்ல கூடாது. மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
எங்கே பெய்யும்?: இன்று தமிழ்நாட்டில், ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 05.12.2023: தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications