50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று.. சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்! மழையும் இருக்கு
சென்னை: தமிழகத்தில் இன்று 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை சராசரியாக 14.4 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த காலத்தில் 115.6 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்து இருக்க வேண்டும். அப்படி எனில் இப்போது பெய்திருக்கும் மழை இயல்பான மழையை விட 10 சதவீதம் குறைவாகும்.

அதிகபட்சமாக தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் 345% அளவுக்கு மழை இயல்பை விட அதிகமாக பதிவாகி இருக்கிறது. இந்த மாவட்டத்தில் 38.8 மில்லி மீட்டர் அளவுக்கே மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 172.5 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. அதேபோல தென்காசி மாவட்டத்தில் 122% அளவுக்கு மழை கூடுதலாக பதிவாகி இருக்கிறது. அதாவது இந்த நாட்களில் மாவட்டத்தில் 87.1 மில்லி மீட்டர் அளவுக்கு மட்டுமே மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 193.4 மி.மீ அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது.
மற்றபடி திருச்சிராப்பள்ளியில் 88%, தூத்துக்குடியில் 97%, திருப்பூரில் 63%, திருப்பத்தூரில் 42%, ராமநாதபுரத்தில் 62%, புதுக்கோட்டையில் 47%, நாகப்பட்டினத்தில் 57%, மதுரையில் 86%, கிருஷ்ணகிரியில் 54%, கரூரில் 95%, திண்டுக்கல்லில் 61%, கள்ளக்குறிச்சி 58%, விருதுநகர் மாவட்டத்தில் 74% என மழை இயல்பை விட குறைவாக பெய்து இருக்கிறது.
இந்நிலையில் இன்று 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதாவது, "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆக.1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆக.3 மற்றும் 4ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (30-07-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications