நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இன்று வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது
தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதோடு, தென்னிந்தியக் கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆகஸ்ட் 15 வரை பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.

இந்த நிலையில் நாளை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நாளை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இதனால் இன்று வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications