எண்ட் கார்ட் போட்டு எகத்தாளம் பண்ண வேண்டாம்.. இன்னைக்கும் சம்பவம் இருக்கு! எங்கெல்லாம் மழை தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் 11-ம் தேதி முதல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி இருக்கும் நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பணியின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஜனவரியில் சில பகுதிகளில் உறைபனி கூட நிலவும். தற்போது பிப்ரவரி முடிந்திருக்கும் நிலையில், கோடைக்காலம் தொடங்கிவிட்டது.

இரவில் கடுமையான பனிப்பொழிவும் பகலில் கடுமையான வெயிலும் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. கடந்த பிப்ரவரியில் இயல்பை விட வெயில் அதிகமாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்த நிலையில் பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் 11ஆம் தேதி முதல் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்றும், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று லேசான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் குமரி கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் நிலையில் 17 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு இல்லை. எனினும் சில இடங்களில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரலாம் என கூறப்படுகிறது. நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் இருக்கும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 33 இருந்து 34 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications