சென்னையில் வானிலை எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்! அடுத்த 3 நாட்கள் நிலவரம்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியிருக்கிறது. இந்நிலையில், சென்னையில் மழைக்கான வாய்ப்பு என்ன என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியிருக்கிறார்.
இது தொடர்பாக தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பதிவாகியிருக்கிறது. இந்த மழையின் பெரும்பகுதி கடலோரப் பகுதிகளை ஒட்டியே பெய்துள்ளதால், கவலைப்படுவதற்கு ஏதுமில்லை. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது, அடுத்த 2-3 நாட்களுக்கு டெல்டா பகுதியில் கனமழைக்கான வாய்ப்பு குறைவு. ஆனால், மழை ஓரளவுக்கு இருக்கும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை பொறுத்தவரை, பகலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மழை பெய்யும். ஆனால், வழக்கம்போல் இன்று இரவு முதல் நாளை காலை வரைதான் உச்சப்பட்ச மழை பெய்யும். எப்படி இருப்பினும் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் அபாயமில்லாத, மிதமான முதல் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். ஆனால், அதற்கு முன்பே சென்னையில் மிதமான வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி பற்றிய தெளிவான நிலவரம், வரும் நாட்களில் தெரியவரும். உள் மாவட்டங்களை பொறுத்தவரை இன்று அங்கொன்றும், இங்கொன்றுமாய் மழை பெய்யும். நாளையும், நாளை மறுநாளும் பலத்த மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி குமரி கடல் பகுதிக்கும், இராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளுக்கும் மேலே நிலைகொண்டுள்ளது. இதனால், இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மழையைப் பெறுவதற்குச் சாதகமான நிலையில் உள்ளன. அடுத்த 2 நாட்களுக்கு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும்" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications