சென்னை அருகே நெருங்கும் குறைந்த காற்றழுத்தம்? புயலாக மாற வாய்ப்பா? வெதர்மேன் கருத்து
சென்னை: வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுமா, அப்படியே மாறினாலும் அதன் தன்மை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடகிழக்கு கடலோரம் அருகே வந்தால் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கனமழை விட்டுவிட்டு பெய்யும்.

பாண்டிச்சேரி- மகாபலிபரம்- சென்னை- பழவேற்காடு- நெல்லூர்- காவாலி ஆகிய கடலோர பகுதிகள் ஹாட் ஸ்பாட்டாக இருக்கும். இங்கெல்லாம் 4 நாட்களும் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே இந்த பகுதிகளில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்கள் பக்காவாக பொருந்துவதால் கனமழை பெய்யும்.
கடலோர மாவட்டங்கள் மட்டுமில்லை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும். அது போல் பெங்களூரிலும் கூட அடுத்த 4 நாட்களில் ஒரு நாளாவது கனமழை பெய்யும்.
மழை நாளை காலை அல்லது மதியம் முதல் தொடங்கும். ஆனால் அதன் நேரத்தை கணிப்பது சற்று கடினம். செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகியவற்றை பார்க்கும் போது நல்ல மழை பெய்யும். குறைந்த காற்றழுத்தம் அல்லது காற்றழுத்தமானது மேற்கு பகுதியில் அதிக மழையை ஏற்படுத்தும்.
இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். சென்னை மற்றும் வட தமிழக கடற்கரையில் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் இருக்கும் என்பதால் குறைந்த காற்றழுத்தம் அடுத்த நிலைக்கு தீவிரமடைய சாதகமான சூழல் இருக்கிறது. சரி அது புயலாக மாறுமா என கேட்டால் அதை உறுதியாக சொல்ல முடியாது.
ஆனால் காற்றழுத்தமாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. மிக்சாங் புயலின் போது இருந்த காற்று போல் இருக்காது தீவிரமாக இருக்காது. காற்றழுத்தம் புயலாக மாறினாலும் அது வலுவிழக்கும். ஆனால் மழைதான் முக்கிய அச்சுறுத்தலாக இருக்கும். பள்ளி மாணவர்களே அரசு விடுமுறை அறிவிக்கும் வரை தேர்வு இருந்தால் நன்றாக படியுங்கள். அது வரை நீங்களாகவே விடுமுறையாக இருக்கும் என கருதாதீர்கள். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்தார்.
இதுகுறித்து வானிலை மையம் கூறியிருப்பதாவது: திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது ஆகும்.












Click it and Unblock the Notifications