மழையெல்லாம் முடிஞ்சுது.. இனி பயமில்லை! வெதர்மேன் சொன்ன ஆறுதல்!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையை நோக்கி நகர்ந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் சென்னையில் இயல்பான மழையே பெய்யும் எனவும், இதனால் மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் டிசம்பர் மாதம் என்பது சென்னைக்கு 'எமனாக' மாறிவிடுகிறது. இந்த மாதங்களில் பெய்யும் மழை, வெள்ளத்தையும், பெரும் பொருள் இழப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. இந்த ஆண்டு சற்று முன்னதாக அக்டோபர் மாதத்திலேயே மழை தொடங்கிவிட்டது. அக்.1ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை + வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இரண்டும் சேர்ந்து, கனமழையை பெய்ய வைத்தது.

காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, சென்னை மற்றும் தெற்று ஆந்திரா கடல் ஓரத்தில் நிலை கொண்டிருக்கிறது. இது மணிக்கு 15 கி.மீ வேகத்தில் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் நேற்று சென்னையில் பரவலாக கனமழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி தொடங்கி, இன்று அதிகாலை 5.30 வரை சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 139 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.
நுங்கம்பாக்கம் - 139.0 மி.மீ
மீனம்பாக்கம் - 116.4 மி.மீ
எண்ணூர் துறைமுகம் - 165.5 மி.மீ
சென்னை - 140.5 மி.மீ
JAYA ENGINEERING CLG - 97.5 மி.மீ
VIT CHENNAI - 80.0 மி.மீ
மாமல்லபுரம் - 78.5 மி.மீ
புழல் - 179.0 மி.மீ
வில்லிவாக்கம் - 160.5 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் - 154.0 மி.மீ
ஒய்எம்சிஏ நந்தனம் - 134.0மி.மீ
பள்ளிகரணை - 122.2மி.மீ
என கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகியுள்ளது. நேற்றிரவு மழைநீர் தேங்கிய பகுதிகளில் இன்று காலை நீர் வடிந்திருக்கிறது. எனவே போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ரயில் சேவையை பொறுத்த வரை சில ரயில்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் இன்று முதல் அடுத்தடுத்த நாட்களுக்கு சென்னையில் பெரிய அளவில் மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "இன்றும் அடுத்தடுத்த நாட்களிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இயல்பான மழையே பெய்யும். இது இயல்பு வாழ்க்கையை பாதிக்காது.
தற்போது உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் பாதிப்பானது இன்று மாலை வாக்கில் வலுவடையும். ஆனால் மழையின் தாக்கம் 18ம் தேதி வரை இருக்கும். இதனால் சென்னை மட்டுமல்லாது சென்னையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் இருக்கும்" என்று கூறியுள்ளார். வெதர்மேனின் இந்த அறிவிப்பு காரணமாக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications