மச்சக்காரங்க.. இன்றைய மழைக்கான ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்
சென்னை: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் வெளியிட்டுள்ள பதிவில், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் தான் மழைக்கான ஹாட்ஸ்பாட்டாக இருக்கும். தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று கூறியுள்ளார். அதேநேரம் சென்னை மழைகுறித்து அவர் கூறியது பற்றியும் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. அதன் எதிரொலியாக வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி, அது நாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென் கிழக்கே 540 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கே-தென் கிழக்கே 650 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 740 கி.மீ. தொலைவிலும் நிலைக்கொண்டிருந்தது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை 2 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பின் படி, தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கி.மீ தூரத்திலும், நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 470 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 580 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 670 கி.மீ தூரத்திலும் நிலைகொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27ஆம் தேதி சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும்" என்று கூறியுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இன்று உருவாக இருக்கும் புயலுக்கு 'பெங்கல்' என்று பெயரிடப்பட உள்ளது. இந்த பெயரை சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது.
இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனிடையே இன்றைய மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று காலை வெளியிட்டுள்ள பதிவில், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் தான் இன்றைக்கு மழைக்கான ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், பாண்டி போன்ற அருகிலுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று கூறியுள்ள வெதர்மேன் சென்னையில் மழை எப்படி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு நிலை சற்று கிழக்கு திசையில் நகர்ந்து வடக்கு நோக்கி நகரும் என்றும் ஆனால் இது உடனே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை நோக்கி வந்துவிடாது என்றும், காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கிச் சென்றவுடன் சென்னையில் மழை பெய்யத் தொடங்கும் என்றும், எனவே நேற்றைக்குவிட இன்று எப்போதாவது தான் சென்னையில் மழை பெய்யும் என்றும் காற்று மேற்கு திசை நோக்கி நகரதொடங்கிய உடன் கனமழை பெய்யும் என்றும், பள்ளிக்கூட மாணவர்கள் இன்று மச்சக்காரங்க (விடுமுறை கிடைத்ததை குறிப்பிட்டு) என்றும் கூறினார்.
இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே மழை வெளுத்து வாங்கி உள்ளது. இதனால் தாழ்வானப்பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து கன மழை பெய்தது. அங்கு பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications