காற்றழுத்தம் காற்றோடு காற்றாக போனதும் நல்ல விஷயம்தான்! தென் சென்னைக்கு குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்
சென்னை: நீங்கள் தூங்கும் நேரத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் மழை பெய்யும். காலையில் பார்த்தால் ஒன்றும் இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தினந்தோறும் நீங்கள் தூங்கும் நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும். அதிலும் தென் சென்னை கனமழையை பெறும்.காற்றழுத்தம் விலகி சென்றது தமிழகத்திற்கு நல்ல செய்தி. அப்போதுதான் தமிழகம் முழுவதும் ஈரப்பதம் பரவும்.

இன்று முதல் நாளை வரை டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள்தான் மழை பெய்ய ஹாட்ஸ்பாட். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வழக்கமாக இரவு முதல் காலை வரை ஆங்காங்கே காலை வேளையில் மழை பெய்யும்.
அது போல் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும். ஆனால் எல்லா இடங்களிலும் மழை இருக்காது.சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து இப்போதே கவலைப்படுவது தேவையற்றது. நமக்கு மழையை கொடுக்கும் எம்ஜேஓ இன்னும் இருக்கிறது. இன்னும் பருவமழை சீசனும் முடிந்துவிடவில்லை. நாம் இப்போது இருப்பது நவம்பர் மத்தியில்தான். இன்னும் மழைக்கான காலம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்றைய தினம் 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடதமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் (நவ.14, 15) பெரும்பாலான இடங்களிலும் 16-ம் தேதி ஒருசில இடங்களிலும் 17, 18, 19-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று (நவ.14) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (நவ.15) புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூர், டெல்டா மாவட்டங்கள், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 16-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 14 செ.மீ., புதுச்சேரியில் 12 செ.மீ., மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, கொள்ளிடத்தில் 11 செ.மீ., அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 8 செ.மீ., கடலூர் மாவட்டம் லால்பேட்டை, புதுச்சேரி பத்துகண்ணு, அரியலூர் மாவட்டம் செந்துறை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வரையிலான வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications