ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை! இதெல்லாம் 300 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு! வெதர்மேன் டேட்டா
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை, தருமபுரி மாவட்டம் அரூரில் 331 மி.மீ. மழை இவை எல்லாம் 300 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு தற்போது நடந்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் என்னடா பண்ணிட்டு போய் இருக்கே! கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 503 மி.மீ.மழை பெய்துள்ளது. அது போல் தருமபுரி மாவட்டம் அரூரில் 331 மி.மீ. மழை பெய்துள்ளது.

கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 50 செமீ. மழை என்பதெல்லாம் 300 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு. கிருஷ்ணகிரி வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக கனமழை கொட்டியுள்ளது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த பெங்கல் புயல் காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே கடந்த 30-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை,காரைக்கால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இதனால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையை காட்டிலும் புதுவை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால் நீர் நிலைகள் நிரம்பி ஊருக்குள் புகுந்துவிட்டது. பெரும்பாலான இடங்களில் கழுத்தளவு வெள்ளம் சூழ்ந்தது.

நெடுஞ்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புதுவையில் இரு சக்கர வாகனங்கள் மூழ்கியுள்ளன. இந்த பாதிப்புகளை சரி செய்யும் பணிகளில் அந்தந்த மாவட்ட , மாநில நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் புயல் கரையிலிருந்து நகர்ந்த நிலையில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்துள்ளது.
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் இதுவரை இப்படி கனமழை கொட்டியதே இல்லை என்கிறார்கள். தருமபுரி- திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அந்த பகுயில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண் அரிப்பு ஏற்பட்டதால் 7 பேர் சிக்கித் தவிக்கிறார்கள். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கூட வெள்ளநீர் புகுந்துவிட்டது. ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கூட எங்கு திரும்பினாலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அது போல் போச்சம்பள்ளி கடை வீதி முழுவதும் வெள்ளத்தில் மிதப்பதால் அங்கு பல கோடி ரூபாய் பொருட்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது. போச்சம்பள்ளி காவல்நிலையம், ஊராட்சி அலுவலகங்களில் கூட வெள்ள நீர் புகுந்துவிட்டது.

அது போல் சேலம் சின்னேரி பகுதிகளில் கூட வெள்ளநீர் ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தென்பெண்ணையாற்றில் இருந்து வெள்ளப்பெருக்கு ஊருக்குள் புகுந்துள்ளது. மக்கள் உணவில்லாமல் அவதியடைகிறார்கள். நிவாரண முகாம்களில் குளிரால் பலர் நடுங்குகிறார்கள்.
திருப்பத்தூர், தருமபுரிக்கெல்லாம் இந்த புயலால் மழை என்பது அரிதிலும் அரிது என்கிறார்கள். இந்த புயலால் பெங்களூருக்கும் மைசூருக்கும் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications