சட்டென மாறும் வானிலை.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் மழை இருக்கு.. அப்போ சென்னை கிளைமேட் என்ன!
சென்னை: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு நல்ல மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாகத் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும்/ ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாகவும், ஓரிரு இடங்களில் இயல்பை விடக் குறைவாகவும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமானநிலையத்தில் 38.2° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வடதமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33° - 37° செல்சியஸ், தென்தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37° - 38° செல்சியஸ், வடதமிழக கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° - 36° செல்சியஸ், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் 31° - 36° செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 21°- 26° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 35.6° செல்சியஸ் (-1.7° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.0° செல்சியஸ் (-2.0° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
மழை இருக்கு: வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாகச் சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 16, 17 தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 18ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 19, 20 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 14 முதல் ஜூன் 18 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகளில் வரும் ஜூன் 18 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று ஜூன் 14 முதல் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூன் 15, 16 தேதிகளில் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மாறும் கிளைமேட்: ஜூன் 17ஆம் தேதி தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும், ஜூன் 18ஆம் தேதி தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் வரும் ஜூன் 18 வரை அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications