வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் எங்கே? குறுக்கே வந்த வில்லனால் வந்த வினை.. வெதர்மேனின் மழை அப்டேட்
சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் தற்போது எந்த பகுதியில் இருக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து நாளை மறுதினம் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.
இது நேற்று காலை (20-10- 2023) 08.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும் வலுவடைந்து 22-10-2023 மாலை தீவிர புயலாக நிலவக் கூடும்.
இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 24-10- 2023 வாக்கில் தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும். மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென் மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை திநகர், அமைந்தகரை உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. மேலும் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இன்று காலையிலும் நாளை காலையிலும் கனமழை பெய்யக் கூடும்.
சென்னையில் அக்டோபர் மாதம் இயல்பை விட குறைந்த அளவு மழையே பெய்யும். வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் வடவங்கக் கடல் பகுதியான ஒடியா- வங்கதேசம் நோக்கி சென்றுவிட்டது. மேற்கு திசை காற்று இதற்கு வில்லனாக மாறிவிட்டது. தற்போதைக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்தம் இந்திய கடற்கரையிலிருந்து விலகும். இன்று தமிழகம் மற்றும் கன்னியாகுமரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications