சுளீர் சுளீர்னு சுட்டெறிக்கப்போகும் சூரியன்.. 3 டிகிரி அதிகரிக்கும் வெப்பம்! கோடை வாடை ஹெவியா வீசுதே
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி அதிகம் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது, "பிப்ரவரி 15 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 16 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிக பட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 22 - 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்): ஏதும் இல்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதும் இல்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதமே மழையும், பனியும் குறைந்து வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
கடந்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து அதற்கு மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த சூழலில் துளிகூட மழை பெய்யாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் அறிவித்து இருப்பதன் மூலம் கோடைக்கால வாடை இப்போதே விசத் தொடங்கி உள்ளதை காண முடிகிறது.












Click it and Unblock the Notifications