வெயிலுக்கு குட்டி பிரேக்.. அடுத்த 2 மணி நேரம்.. தென்காசி, கோவைக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று முதல் வெயில் கொளுத்தி எடுக்க ஆரம்பித்துள்ளது. இன்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கொஞ்சம் வெயிலுக்கு பிரேக் கொடுக்கும் வகையில் மழை அப்டேட்டை வானிலை மையம் கொடுத்துள்ளது. தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் மழை கொட்டி வந்தது. அதுவரை வாட்டி வந்த வெயிலுக்கு தென் மேற்கு பருவமழை ஃபுல் ஸ்டாப் கொடுத்தது. அவ்வப்போது தலைநகர் சென்னையிலும் மழை கொட்டியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் மட்டுமல்லாமல், வடகிழக்கு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்தது.

வாட்டி வதைக்கும் வெயில்
குறிப்பாக நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக இங்கு கனமழை கொட்டி தீர்த்த நிலையில் நேற்று சற்று குறைந்தது. நேற்று மாலையில் வெயில் அடித்தது. இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இன்று காலையில் இருந்தே வெயில் அடித்து வரும் நிலையில், வெயிலுக்கு கொஞ்சம் பிரேக் கொடுக்கும் வகையில் வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென்காசி மற்றும் கோவை
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதாவது தென்காசி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இந்த மழையானது பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் ஒருசில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
முன்னதாக இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது. இதேபோன்று தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
அடுத்த ஒரு வார அப்டேட்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று 19-06-2025 மற்றும் 20-06-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 21-06-2025 முதல் 25-06-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலைய பொறுத்தவரை இன்று 19-06-2025 முதல் 21-06-2025: அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் பொதுவாக மாற்றத்திற் கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் சற்று உயாககூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்
சென்னையில் 2 நாட்களுக்கு மழைக்கு சான்ஸ்
சென்னையில் இன்று (19-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (20-06-2025}: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு செமீ
* சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), (நீலகிரி) தலா 7;
* சின்கோனா (கோயம்புத்தூர்), மேல் கூடலூர் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) தலா 5;
* வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி) தலா 4;
* அவலாஞ்சி (நீலகிரி) 3, சோலையார் (கோயம்புத்தூர்), போர்த்திமுண்டு (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), கிளன்மார்கன் (நீலகிரி), பார்சன் பள்ளத்தாக்கு (நீலகிரி) தலா 3:
* விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), ஏற்காடு AWS (சேலம்), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), மேல் பவானி (நீலகிரி), பெரியாறு (தேனி), சேலம் (சேலம்) தலா 2 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications