வெளிய கூட போக முடியாது போல.. வரும் நாட்களில் வெயில் படுத்தி எடுக்கப்போகுது.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அதீத வெப்பம் நிலவி வந்த நிலையில், அதைக் குளிர்விக்கும் வகையில் கடந்த சில நாட்களாகக் கொஞ்சம் மழை பெய்து வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்யும் நிலையில், பெரும்பாலான இடங்களில் வெப்பம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மதிய நேரங்களில் வெளியே கூட செல்ல முடியாத சூழலே நிலவியது. அதேநேரம் கடந்த சில நாட்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்திருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை நிலவரம்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை) 6, எண்ணூர் AWS (திருவள்ளூர்) 4, பாரூர் (கிருஷ்ணகிரி), வேலூர் (வேலூர்) தலா 3, மண்டலம் 03 மாதவரம் (சென்னை), உசிலம்பட்டி (மதுரை), செங்குன்றம் (திருவள்ளூர்), பாலகோடு ARG (தர்மபுரி), காட்பாடி (வேலூர்), பாலக்கோடு (தர்மபுரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை) தலா 2 மழை பெய்துள்ளது.
அதேபோல மண்டலம் 06 கொளத்தூர் (சென்னை), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), மங்களபுரம் (நாமக்கல்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), மண்டலம் 03 புழல் (சென்னை), மண்டலம் 07 அயப்பாக்கம் (சென்னை), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), நாகர்கோயில் (கன்னியாகுமரி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), அம்முண்டி (வேலூர்) தலா 1 மழை பெய்திருக்கிறது.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலை :- வேலூர்: 40.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகத்தில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
வட தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-41° செல்சியஸ், தென் தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33-38° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-38° செல்சியஸ், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 33-35° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 22-27° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
லேசான மழை தான்
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று (10-04-2025), மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (11-04-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் வலுவிழந்தது. இருப்பினும், அதே மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஏப்ரல் 13 முதல் 17ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை இன்று முதல் ஏப்ரல் 14 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை ஏனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும். ஏப்ரல் 15ம் தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். வரும் ஏப்ரல் 11 மற்றும் 12ம் தேதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (11-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (12-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்றும் நாளையும் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 15 வரையிலான நாட்களில் எந்தவொரு எச்சரிக்கையும் இல்லை.
வங்கக்கடல் பகுதிகளை பொறுத்தவரை இன்று மத்தியகிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை முதல் வரும் ஏப்ரல் 15 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகளை பொறுத்தவரை இன்று இலட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை முதல் ஏப்ரல் 15 வரையிலான நாட்களில் எச்சரிக்கை ஏதுமில்லை. இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications