மிக்ஜம் புயல்.. இன்று முதல் 3 நாள்.. தமிழகத்தில் கெட்ட ஆட்டம் போடப்போகும் மழை.. சென்னை தான் ஹைலைட்
சென்னை: வங்கக்கடலில் உருவான 'மிக்ஜம்' புயல் வலுவடைந்து வருகிறது. இந்த புயல் நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கும் இடையே 5-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கரையை கடக்கக் கூடும் என்பதால் தமிழத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பபு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், "தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. தாழ்வுமண்டலம் தற்போது தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே-தென் கிழக்கே சுமார் 740 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு சுமார் 860 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென் கிழக்கே சுமார் 910 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (சனிக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஞாயிற்றுக்கிழமை புயலாக அது வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
புயல் உருவானால் அந்த புயலுக்கு 'மிக்ஜம்' என்று பெயரிடப்படும். இந்த பெயரை மியான்மர் நாடு பரிந்துரைத்துள்ளது.
புயலாக வலுவடைந்த பின்னர் நேராக வடமேற்கு திசையில் நகரத் தொடங்கும், தெற்கு ஆந்திரா தெற்கு ஆந்திரா-வட தமிழக கடலோர பகுதிகளில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) நெருங்கும். அதன்பின்னர் தெற்கு ஆந்திர கடலோர பகுதிக்கு இணையாக வடக்கு நோக்கி நகர்ந்து, வரும் 5-ந்தேதி காலையில் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே சுமார் 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி புயலாக கரையை கடக்கக் வாய்ப்பு உள்ளது.
புயலின் மையப் பகுதியான கண் பகுதி, எந்த இடத்தில் கடக்கும் என்பது இதுவரை தெரியவில்லை... இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் 3 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேநேரம் இன்று டெல்டா மாவட்டங்களிலும், நாளை மற்றும் நாளை மறுதினம் வட கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் . எனவே தமிழ்நாட்டில் இன்று (சனிக்கிழமை) அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது., கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை ஞாயிறு அன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேநேரம் திங்கள்கிழமை அன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். இதுதவிர கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகனமழை பெய்யக் கூடிய திருவள்ளூர் மாவட்டத்துக்கு வருகிற 4-ந்தேதி சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலெர்ட்) விடப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி அம்பத்தூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, காட்டுமன்னார் கோவில், கொடுமுடி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், கொளத்தூர், கோடம்பாக்கம், மயிலாடுதுறை, தேனாம்பேட்டை, திருப்பூண்டி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது" என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications