தூத்துக்குடி, நெல்லைக்கு மீண்டும் சோதனை.. இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.. கலக்கத்தில் மக்கள்
சென்னை: தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் சிலஇடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

29, 30-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 31-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, வரும் 30, 31-ம்தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரே நாளில் பேய் மழை கொட்டி தீர்த்தது. இதனால் வரலாறு காணாத மழை பெய்து ஊரே வெள்ளக்காடாக மாறியது. தாமிரபரணி ஆறு பல்வேறு கிராமங்களிலும் நகரங்களிலும் புகுந்து 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இதனால் பலர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து பாதிப்புக்குள்ளாகினர்.
தூத்துக்குடி, நெல்லையில் இன்னும் கூட இயல்பு நிலை திரும்பவில்லை. வெள்ள நீரும் முழுமையாக வடியவில்லை என மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். அதற்குள் தென் மாவட்டங்களில் மறுபடியும் கனமழை என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பொதுமக்களை கலங்கச் செய்துள்ளது.
இதனால் 4 மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை குழுவினர் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் அனைத்து துறை அதிகாரிகளும் ஊழியர்களும் 30, 31 மற்றும் 1 ஆகிய தேதிகளில் அலுவலகங்களில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல்லையில் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அணைகளை தீவிரமாக கண்காணிக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications