இன்று 3 மாவட்டங்கள், நாளை ஒட்டுமொத்த கடலோர தமிழகத்தில் மழை கொட்டும்.. வானிலை மையம் தந்த பரபர அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சில இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் எந்தளவுக்கு மழை கொட்டி தீர்த்தது என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

அடுத்துக் கடந்த மாதம் இறுதியில் தென்மாவட்டங்களில் நின்று பெய்த கனமழையால் நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. இப்படி ஒரே மாதத்தில் இரு முறை தமிழகத்தில் கனமழை கொட்டியது.
மழை இருக்கும்: அதன் பிறகு பெரியளவில் மாநிலத்தில் எங்கும் மழை பெய்யவில்லை. இதற்கிடையே அடுத்த சில நாட்களில் பல இடங்களில் நல்ல மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று அதிகாலை ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜன. 5) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நாளை வானிலை: நாளை (ஜன. 6) கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் (ஜன.7) கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் நாட்கள்: வரும் ஜன.8ஆம் தேதி கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் ஜன. 9, ஜன. 10 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 - 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 - 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications