அடுத்த 2 மணி நேரம்.. இடி, மின்னலுடன் கோவை டூ குமரி வரை.. 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் கோவை முதல் குமரி வரை 12 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கோவை, தேனி, விருதுநகர், திருப்பூர், நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை வெயிலில் இருந்து கொஞ்சம் தப்பிக்கும் வகையில் கிளைமேட் ஜில்லென இருக்கிறது. குறிப்பாக தென்காசி, குமரி, நெல்லை போன்ற தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

12 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்
இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் கோவை முதல் குமரி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை மற்றும் கன்னியாக்குமரி ஆகிய 12 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
11 ஆம் தேதி வரை
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த ஒரு வாரத்திற்கான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகம்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
குறிப்பாக இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அது போல் நாளை முதல் முதல் 11 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலைக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
சென்னையில் எப்படி
நாளை முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக் கூடும். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33- 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27- 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications