அடுத்த 3 மணி நேரம்.. சென்னை முதல் குமரி வரை.. 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை முதல் குமரி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று இன்று மழை அதிகம் பெய்யும் என்று கூறப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, வடமேற்கு திசைசியில் நகர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இது அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடற்கரையை இது நோக்கி நகரும்.
இதன் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களான, தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை 27 ஆம் தேதி அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
28 ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
29 ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வருகிற 30 ஆம் தேதி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications