கலையலங்காரம் எல்லாத்தையும் மாத்து! மழைக்கு கெட்அவுட்.. வெயிலுக்கு கட்அவுட்! கொளுத்தப் போகும் சூரியன்
சென்னை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக 11-ம் தேதி முதல் மழை பெய்து வந்த நிலையில் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இந்த நிலையில், நாளை முதல் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் எனவும் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடகிழக்கு பருவமழை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் உறை பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஜனவரி முடிந்து பிப்ரவரி ஆரம்பித்து சில நாட்களிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

அதே நேரத்தில் பிப்ரவரி முதல் வாரம் வரை பகலில் கடுமையான வெயிலும், இரவில் கடுமையான பனிப்பொழிவும் இருந்தது. குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் கடந்த காலங்களை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
குறிப்பாக ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாகவே இருந்தது. மேலும் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் 11ஆம் தேதி முதல் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது. மேலும் திண்டுக்கல், கோவை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் லேசான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இந்த நிலையில் தமிழகத்தில் மார்ச் 15ஆம் தேதியான நாளை முதல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும், வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," பூமத்திய ரேகையையொட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவிலிருந்து தெற்கு கேரளம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
தொடர்ந்து, சனிக்கிழமை (மாா்ச் 15) முதல் மாா்ச் 17-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் மாா்ச் 13-இல் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்." என கூறியுள்ளது. ஏற்கனவே பிப்ரவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவு வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்த நிலையில் கீழ் அடுக்கு சுழற்சி விலகியதால் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications