கோயம்பேடு சந்தையில் குவிந்த தக்காளி.. ஒரே நாளில் ரூ.50 விலை குறைவு! மக்கள் நிம்மதி
சென்னை: கனமழை காரணமாக நேற்று கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்திருந்தது. இதனால் விலை தாறுமாறாக உயர்ந்து கிலோ ரூ.120 வரை விற்பனையானது. இன்று மழை குறைந்திருக்கும் நிலையில் வரத்து சீராகியுள்ளது. இதனால் விலை குறைந்திருக்கிறது.
நவம்பர், டிசம்பர் மாதம் வந்தாலே மழையை கையில் பிடிக்க முடியாது. ஆனால், இந்த முறை அக்டோபர் மாதத்திலேயே மழை தீவிரமடைந்துவிட்டது. சென்னையை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிதான் இந்த மழைக்கு காரணம். இது மெல்ல நகர்ந்து சென்னையை ஒட்டி தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

அவர்கள் கணித்ததைபோல, காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை நோக்கி நகர்ந்தது. எனவே நேற்று சென்னை மட்டுமல்லாது அதை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெளுத்து எடுத்தது. மழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வர வேண்டிய காய்கறி லோடுகளின் வரத்து குறைந்தது. இதனால் காய்கறி விலை தாறுமாறாக எகிறியது.
குறிப்பாக தக்காளி நேற்று ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனையானது. இதே திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 கிலோ ரூ.100க்கு விற்பனையானது. விலையேற்றம் குறித்து பேசிய கோயம்பேடு சந்தை வியாபாரிகள், தினமும் கோயம்பேடு சந்தைக்கு 1300 டன் அளவுக்கு தக்காளி வரும். ஆனால் நேற்று வெறும் 800 டன் அளவுக்குதான் வந்திருந்தது. வரத்து குறைவுதான் விலையேற்றத்திற்கு காரணம் என்று கூறினார்.
இந்நிலையில் இன்று மழையின் தாக்கம் குறைந்திருக்கிறது. எனவே காய்கறி லோடுகளின் வரத்து சீராகியுள்ளது. இதனால் தக்காளி விலை குறைந்திருக்கிறது. நேற்றை விட இன்று ரூ.50 குறைந்து, ஒரு கிலோ தக்காளி ரூ.70க்கு விற்பனையாகிறது. சென்னைக்குள் உள்ள சில்லறை கடைகளில் கிலோ ரூ.80-85 வரை விற்பனையாகிறது. நேற்றை விட இன்று விலை குறைந்து இருந்தாலும், ஒரு கிலோ தக்காளி இவ்வளவு விலையில் விற்கப்படுவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தக்காளியை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் குறைய தொடங்கியுள்ளது. வானிலை நிலவரத்தை பொறுத்த வரை இன்று சென்னைக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று மழை மிதமானதாகவே இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். எனவே மக்கள் சற்று ஆசுவாசமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications