ஆக்ஷன் உதயநிதி.. இளைஞரின் மழை வெள்ள வீடியோ! ஸ்பாட்டுக்கே போன துணை முதல்வர் - குவியும் பாராட்டு
சென்னை: தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருவர் எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் துணை முதல்வர் உதயநிதியை டேக் செய்திருந்தார். இதையடுத்து உடனடி நடவடிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து இரவோடு இரவாக மழை நீர் வெளியேற்றும் பணி நடந்தது. அதுமட்டுமின்றி இன்று நேரில் உதயநிதி ஸ்டாலின் அந்த ஸ்பாட்டுக்கு சென்று ஆய்வு செய்து நிரந்தர தீர்வுக்கு உத்தரவிட்டது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்ய தொடங்கியது. நேற்றும் பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இன்று தான் மழை இன்றி உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் நேரடியாக களஆய்வு மேற்கொண்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்றும் பணியை முடுக்கி விட்டனர்.
இந்நிலையில் தான் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே அகரம் தென் பகுதியில் கணேஷ் நகர் மெயின் ரோட்டில் வசிக்கும் விக்னேஷ் என்பவர் தான் வசிக்கும் வீட்டை சுற்றி மழைநீர் தேங்கியிருப்பதை காட்டும் வகையில் தனது வீட்டு பால்கனியில் நின்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் பேசிய விக்னேஷ், ‛‛எல்லாருக்கும் வணக்கம். நீங்கள் வீடியோவில் பார்ப்பது தாம்பரம் அருகே அகரம்தென் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் கணேஷ் நகர் மெயின் ரோடு. இந்த ரோட்டை பாருங்க. இதில் கழிவுநீர் மற்றும் மழை நீர் சேர்ந்து எப்படி செல்கிறது என்பதை பார்க்கலாம்.
இந்த ரோட்டை மக்கள் யாரும் பயன்படுத்த முடியுமா? இன்னும் கொஞ்சம் மழை பெய்தால் வீட்டுக்குள் தண்ணீர் வந்து விடும். பலமுறை புகார் அளித்து விட்டோம். தாம்பரம் அகரம்தென் பஞ்சாயத்தில் புகார் அளித்துள்ளோம். செங்கல்பட்டு கலெக்டரிடமும் புகார் அளித்தோம். கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று புகாரளித்தோம். தலைமை செயலாளரிடமும் கூறினோம்.அவர் செய்து தருவதாக கூறினார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
அந்த பகுதியில் நீங்கள் பார்க்கலாம். அது மழைநீர் வடிகால். இயற்கையாக அமைந்த ஓடை. அதை கூட முறைப்படி துர்வாரவில்லை. இதுபற்றியும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வீடியோவை பார்க்கும் தலைமை செயலாளர், முதல்வர், உதயநிதி சார் ஆகியோர் பார்த்து ஒரு உத்தரவு போட்டு நிரந்தரமான தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்'' என்று கூறியிருந்தார். மேலும் அந்த பதிவில் உதயநிதி ஸ்டாலினை அவர் டேக் செய்திருந்தார்.
இதை கவனித்த உதயநிதி ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜூக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மழைநீரை வெளியேற்றும் பணி நேற்று இரவு தொடங்கியது. இந்த பணியால் மழைநீர் முற்றிலுமாக வெளியேறியது. இதற்கிடையே இன்று உதயநிதி ஸ்டாலின் நேரில் அங்க சென்று நிலைமையை பார்த்தார். அதன்பிறகு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
இதுபற்றியும் எக்ஸ் பக்கத்தில் விக்னேஷ் குறிப்பிட்டு உள்ளார். அதில், "என்னுடைய எக்ஸ் தள பதிவை பார்த்து உடனடியாக நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் இந்த பகுதிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. ஒவ்வொரு முறையும் மழை காலத்தில் இந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்குவது வழக்கம். கிருஷ்ணா நகர், 6வது தெரு, கணேஷ் நகர் பிரதான சாலை பகுதிகளில் சிறிய அளவு மழை பெய்தாலே இந்த சாலையில் தண்ணீர் நின்றுவிடும்.
பலமுறை புகாரளித்தும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. நான் ஒரு வீடியோ பதிவை எடுத்து அதை எனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்தேன். அதைக் கண்ட துணை முதல்வர் உடனடியாக நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த முறை இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
ஒரு சாமானிய மனிதனாகிய என்னுடைய பதிவை கண்ட துணை முதல்வர் நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. மகிழ்ச்சி அளிக்கிறது. ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வரும் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருகிறேன் என உறுதி அளித்து சென்று இருக்கிறார். இது மிகவும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications