வைகை அணையில் 3,000 கன அடி நீர் திறப்பு.. மதுரையில் கடலாக உருமாறிய வைகை நதி- போக்குவரத்து நிறுத்தம்!
மதுரை: மதுரை மாநகருக்குள் வைகை நதி கடல் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து மதுரை மாநகரில் கோரிப்பாளையம் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்தெடுத்தது. இதனால் மூல வகை, கொட்டக்குடி, சுருளியாறு ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து 24,000 கன அடியாக அதிகரித்தது. இதனையடுத்து வைகை அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென 68 அடியாக உயர்ந்தது.

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் வைகை அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளது.
இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து 5 மாவட்ட பாசனங்களுக்காக நீர் திறந்துவிடப்பட உள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை கரையோர மக்களுக்கு 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் 2-வது முறையாக வைகை அணை பாசனத்துக்காக திறக்கப்படுவது 5 மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.
இதனிடையே மதுரை மாநகரில் வைகையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மதுரை மாநகரில் வைகை வெள்ளம் கடல் போல காட்சியளிக்கிறது. மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. மேலும் கோரிப்பாளையம் பாலத்தில் அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications