இன்று பேய் மழை வெளுக்க போகுது! சென்னை உட்பட பல மாவட்டங்களில் சம்பவம்.. வானிலை மையம் மேஜர் அலர்ட்
சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவும் சூழலில், இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு பல்வேறு இடங்களிலும் கனமழை விளாசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

வானிலை மையம்
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (22-10-2025) மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழக - புதுவை - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது, மேலும் மேற்கு-வடமேற்கு திசையில், வடதமிழக - புதுவை - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக்கூடும்.
இன்று (22-10-2025) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும்.
சென்னையில் கனமழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய தினம் (23-10-2025) வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
மழை கொட்டும்
நாளை மறுநாள் (24-10-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் அக்டோபர் 25ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக்டோபர் 26, 27 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications