குடை அவசியம்! அடுத்த 3 மணி நேரம்.. மதுரை உள்பட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* விழுப்புரம்
* கள்ளக்குறிச்சி
* வேலூர்
* திருவள்ளூர்
* மதுரை
* சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தில் 11 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருப்பத்தூர்
* காஞ்சிபுரம்
* ராணிப்பேட்டை
* செங்கல்பட்டு
* கடலூர்
* தஞ்சாவூர்
* திருவாரூர்
* நாகப்பட்டிணம்
* திண்டுக்கல்
* விருதுநகர்
* ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வானிலை மையத்தில் ஒரு வாரத்திற்கான அப்டேட்டில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 29.10.2024 மற்றும் நாளை 30.10.2024 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோன்று தீபாவளி அன்று 31.10.2024 தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 1 ஆம் தேதி தமிழகத்தில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று 02.11.2024 அன்று தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.11.2024 மற்றும் 04.11.2024 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று 29.10.2024 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னையில் தீபாவளி அன்று 31.10.2024 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications