என்னப்பா இப்படி கொளுத்துறியே.. தமிழகம் + 6 மாநிலங்களை டார்கெட் செய்த வெயில்! வெப்ப அலை வார்னிங்
சென்னை: இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை தற்போது தீவிரமடைந்துள்ளது. 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பரப்புரையை போலவே வெயிலும் சூடுபிடித்துள்ளது. அதாவது அடுத்த 5 நாட்களில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வெயில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.
அதாவது, சமவெளி பகுதிகளில் குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸும்(104 டிகிரி ஃபாரன்ஹீட்), கடலோரப் பகுதிகளில் 37 டிகிரி(98.6 டிகிரி ஃபாரன்ஹீட்) மற்றும் மலை பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ் (86 டிகிரி ஃபாரன்ஹீட்) என வெப்பம் உயரும்போது வெப்ப அலை ஏற்படுகிறது. மிக சரியாக சொல்வதெனில் இயல்பான வெப்ப நிலையை விட 4.5 டிகிரி செல்சியல் வெப்பம் அதிகரிக்கும் போது வெப்ப அலைக்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதுவே இயல்பை விட 6.4 டிகிரி செல்சியல் வெப்பம் அதிகரிக்கும் போது கடுமையான வெப்ப அலை ஏற்படும்.
தற்போது மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலும், கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும். அதேபோல, ஒடிசாவில் இன்று வெப்ப அலை வீசும். ஜார்க்கண்ட் பகுதியில் ஏப்.25ம் தேதி வெப்ப அலைக்கான வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்று தொடங்கி ஏப்.25 வரை கடலோர ஆந்திரா, ஏனாம், ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால், கடலோர கர்நாடகா மற்றும் கேரளா & மாஹே ஆகிய பகுதிகளில் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலை நிலவும்.
இன்றைய வானிலையை பொறுத்த அளவில், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும். இரவு நேரத்திலும் வெப்பத்தின் தாக்கத்தை உணர முடியும். வழக்கத்திற்கு மாறாக இந்த கோடையில் வெப்ப அலையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications