ஊட்டியும், திண்டுக்கல்லும் ஹாட்ஸ்பாட்.. 13 மாவட்டங்களில் சம்பவம் செய்யப் போகும் மழை! உஷார் மக்களே!
சென்னை: தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக - புதுவை கடற்கரையை, புதுச்சேரி அருகில் இரவு சுமார் 11 மணி அளவில், கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசியது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில் நேற்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதியில், கடலூருக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்மேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும் புயலாக நிலை கொண்டிருந்த நிலையில், மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, படிப்படியாக குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இந்நிலையில் இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,”தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications