வெயில் குறைந்து தமிழ்நாட்டில் வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்!
சென்னை: இன்று (ஏப்ரல் 28) மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30-ல் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மத்திய பிரதேசம் முதல் குமரிக்கடல் வரை நிலவும் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 15 இடங்களில் வெப்பநிலை சதம் அடித்துள்ளது. அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு நீர்ச்சத்து குறைப்பாட்டை தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் HEAT STROKE சிறப்பு வார்டு அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் அடுத்தவாரம் தொடங்கும் நிலையில், கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளில் 100 டிகிரி பாரான்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் நேற்று 15 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக, வேலூரில் 106 புள்ளி 7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் தலா 105 புள்ளி 8 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையம், திருச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் 104 டிகிரியையும் தாண்டியது. மதுரை நகர், தருமபுரி, திருப்பத்தூர், திருத்தணி, சேலம், கோவை, பாளையங்கோட்டை, சென்னை மீனம்பாக்கம் ஆகிய இடங்களிலும் வெயில் 100 டிகிரியை தாண்டி தகித்தது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் சென்னையில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. இந்நிலையில், வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ORS கரைசல் வழங்கும்படி பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுமார் 0.9 கிமீ உயரத்தில், மத்திய பிரதேசத்தின் மத்திய பகுதிகள் முதல் குமரிக்கடல் வரை விதர்பா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
29-04-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
30-04-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பகல் 1 மணி வரை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications