ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள்.. தமிழகத்தில் கொட்டப்போகும் பெருமழை.. அலர்ட் மக்களே!
சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் அக்டோபர் 24 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்; காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் (அக்டோபர் 16) தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் என தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (அக்டோபர் 18) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
மேலும், தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் 24 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications