பிச்சு உதறப்போகும் மழை! இது சீசனே இல்லை.. இருந்தாலும் கனமழைக்கு ரெடியா இருங்க - வெதர்மேன் வார்னிங்
சென்னை: நேற்று கொங்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருந்தது. இந்நிலையில் இன்றும் மழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் ஷேர் செய்திருப்பதாவது, "தென் தமிழகம் மற்றும் கொங்கு மண்டலத்திற்கு நேற்று சிறந்த நாளாக அமைந்தது. இன்றும் மழை பெய்யும், ஆனால் நேற்று போல் பரவலாக இருக்காது. திண்டுக்கல், திருப்பூர் மண்டலங்களுக்கும் ஓரளவுக்கு மிதமான மழை பெய்யும்.

இன்று கன்னியாகுமரியில் மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்யும். தென்காசி, நெல்லை, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மற்றும் ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கோவை மண்டலங்களில் உள்ள கொங்கு மண்டலத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்" என தெரிவித்திருக்கிறார்.
திடீர் மழை ஏன்?
இந்திய பெருங்கடல் பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், உருவாகியிருக்கும் வளிமண்டல சுழற்சி கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருந்தது. இந்த தாழ்வு பகுதிதான் தற்போது மழைக்கு காரணம். வழக்கமாக பிப்ரவரியில் மழை பெய்யாது. இருப்பினும் கடலில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் தொடரும் என்பதால், கொங்கு மாவட்ட மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
சென்னை வானிலை மையம் சொன்னது என்ன?
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. நேற்று மதியம் வெளியாகியிருந்த அறிவிப்பில், "இன்று தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
27 மற்றும் 28ம் தேதிகளில் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச்.1 முதல் 3 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு
இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னைக்கு வார்னிங்
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications