தாழ்வு மண்டலமாக மாறிய ஆழ்ந்த காற்றழுத்தம்! தீவிர புயலாக மாறும் டானா எங்கு எப்போது கரையை கடக்கும்?
சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்றுள்ளது. இது நாளை டானா புயலாக மாறும். இந்த புயலானது வரும் 24 ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது. ஆரம்பமே அசத்தல் என்பதை போல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து தமிழகத்தில் பரவலாக மழையை கொடுத்தது.

இந்த ஆண்டு லாலினோ ஆண்டு என்பதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை தமிழகத்திற்கு அதிக மழை கிடைக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் அக்டோபர் 21 வாக்கில் ஒரு குறைந்த காற்றழுத்தம் வங்கக் கடலில் உருவாகும் என சொல்லப்பட்டது. அந்த வகையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது.
இது தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகரும். நாளை புயலாக மாறும். நாளை மறுநாள் 24 ஆம் தேதி மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய மாவட்டங்களை அடக்கிய வடமேற்கு வங்கக் கடலை புயல் அடையும்.
இதையடுத்து ஒடிசாவின் புரிக்கும் மேற்குவங்கத்தின் சாகர் தீவுக்கும் இடையே வரும் 25 இல் தீவிர புயலாக மாறி அதிகாலை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வரை காற்று வீசும். இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக் கூடும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக் கடலில் உருவாக போகும் முதல் புயல் இதுதான். இந்த புயலானது தமிழகத்திற்கானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நவம்பர் மாதம் முதல் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications