வங்கக்கடலில் உருவானது ‛ரெமல்’ புயல்.. ஓமன் சூட்டிய பெயரின் அர்த்தம் தெரியுமா? சுவாரசியம்
சென்னை: வங்கக்கடலில் இன்று ‛ரெமல்' புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் நாளை தீவிர புயலாக உருமாறி கரையை கடைக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் ‛ரெமல்' புயலுக்கான பெயர் காரணம், அதன் பின்னணி அர்த்தம், புயல் கரையை கடக்கும் இடம், புயலால் மழை பெறும் இடங்கள் குறித்த முக்கிய விபரங்கள் வருமாறு:
தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கியது. கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் காலம் தொடங்கியது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே தமிழ்நாடு முழுவதும் கோடை மழை தொடங்கியது.

இதனால் கத்தரி வெயில் முற்றிலுமாக மறைந்து தமிழ்நாட்டில் கோடை மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெயிலில் இருந்து தப்பித்தனர்.
இதற்கிடையே தான் இன்று முதல் தமிழ்நாட்டில் கோடை மழை படிப்படியாக குறையும் எனவும், வெயில் அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதோடு இன்று வங்கக்கடலில் புதிய புயல் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வங்கக்கடலில் புதிய புயல் உருவாகி உள்ளது.
அதாவது வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவியது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது மேலும் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி உள்ளது.
இந்த புயலுக்கு ‛ரெமல்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் தீவிர புயலாக மாறி நாளை நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளைய தினம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் புயலுக்கு ‛ரெமல்' என்ற பெயர் ஏன் சூட்டப்பட்டது? அந்த பெயரின் அர்த்தம் என்ன? அந்த பெயரை பரிந்துரை செய்த நாடு பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. பொதுவாக ஒவ்வொரு புயலையும் குறிக்கும் வகையிலும், அந்த புயலின் நகர்வை மக்களிடம் எளிதாக எடுத்து சொல்லும் வகையிலும் இந்த பெயர் வைக்கும் நடைமுறை உள்ளது.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் புயல் உருவாகி வருகிறது. இந்த புயல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான் கத்தார், இலங்கை, ஏமன், தாய்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட 13 நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்கள் சூட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதைய ‛ரெமல்' என்ற பெயரை பரிந்துரை செய்த நாடு ஓமன் ஆகும். மேலும் ‛ரெமல்' என்றால் அரபி மொழியில் மணல் என்று அர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ‛ரெமல்' புயலால் தமிழகத்தை விட வடகிழக்கு மாநிலங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. நாளை முதல் 28 ம் தேதி வரை அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 200 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications