பைக் சைலன்சரில் தண்ணீர் ஏறிடுச்சுன்னா! இதை மட்டும் செய்யாதீங்க! மெக்கானிக் சொல்லும் டிப்ஸ்!
சென்னை: சைலன்சரில் தண்ணீர் போய்விட்டால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பது குறித்து சென்னை சூளைமேட்டை சேர்ந்த மெக்கானிக் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மழை, வெள்ளம் சூழ்ந்தாலே கடுமையாக பாதிக்கப்படும் இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள்தான். வெள்ள நீரின் அளவு ஏறுவது தெரிந்து ஒரு சிலர் வண்டிகளை பாதுகாப்பாக மேடான இடங்களில் விடுவார்கள்.

சிலருக்கு வெளியே கொண்டு செல்ல வழி இருக்காது. அவர்களுடைய வாகனங்கள் மூழ்கி சேதமடையும். அப்படித்தான் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட அடைமழையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் வீடுகளின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், கார்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இன்னும் சிலர் வெள்ள நீர் குறைவாகத்தான் இருக்கிறது என கருதி பைக்கை கொண்டு சென்றால் அங்கு சைலன்சர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் இருக்கும். உடனே வண்டி ஆப் ஆகிவிடும். தள்ளிக் கொண்டு செல்லும் நிலை ஏற்படுகிறது.
அந்த வகையில் சென்னையின் போரூர், காரப்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு முதல் 15 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசையாக பார்த்து பார்த்து வாங்கிய கார்கள் எல்லாம் மூழ்கிவிட்டன. பள்ளிக்கரணையில் கார்கள் மிதந்த அவலங்களும் நடந்தன. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்த நிலையில் வாகனங்களில் தண்ணீர் ஏறி கொண்டதால் அதை மெக்கானிக் ஷாப்பிற்கு எடுத்துச் செல்கிறார்கள். அவ்வாறு தண்ணீர் ஏறிக் கொள்ளும் வாகனங்களை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மெக்கானிக் விளக்கத்தை பாருங்கள்.
இதுகுறித்து சூளைமேட்டை சேர்ந்த மெக்கானிக் ஒருவர் கூறியிருப்பதாவது: வாகனங்களில் தண்ணீர் ஏறிவிட்டதாக தினமும் 10 முதல் 30 வாகனங்கள் வரை வருகின்றன. சைலன்சரில் தண்ணீர் ஏறிவிட்டால் மக்கள் செய்யும் ஒரே தவறு! அதை ஸ்டார்ட் செய்து பார்க்கிறார்கள். அப்படி ஸ்டார்ட் செய்தால் சைலன்சரில் உள்ள தண்ணீர் என்ஜினுக்கும் சென்றுவிடும்.
இதனால் என்ஜினியை மாற்ற வேண்டியிருக்கும். என்ஜினை மாற்ற ரூ 10 ஆயிரம் , 13 ஆயிரம் என வண்டிக்கேற்ப செலவு செய்ய வேண்டியிருக்கும். இதே அவர்கள் ஸ்டார்ட் செய்யாமல் மெக்கானிக்கிடம் கொண்டு வந்தால் கார்பென்டரில் அடைத்திருக்கும் தண்ணீரை வெளியே எடுத்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்வோம். இதற்கு வெறும் ரூ 200 தான் செலவாகும்.
தண்ணீர் ஏறுகிறது என தெரிந்தவுடன் சைலன்சரில் கவர் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். பின்னர் தண்ணீர் வடிந்த பிறகு மெக்கானிக்கிடம் கொண்டு வந்தால் எளிதாக ஸ்டார்ட் செய்துவிடலாம். வேலையும் சீக்கிரம் முடிந்துவிடும். தண்ணீர் வந்துவிட்டது, சைலன்சரை மூடிவைத்திருந்தோம் என சொன்னாலே போதும், சில நிமிடங்களில் வேலையை முடித்துவிடலாம். இவ்வாறு மெக்கானிக் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications