விலகிய தென் மேற்கு பருவமழை! வடகிழக்கு பருவமழை எப்போது? சென்னை வானிலை மையத்தின் முக்கிய தகவல்
சென்னை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே இனி தமிழகத்தில் மழைதான் என்றும் தெரிவித்துள்ளது. அது போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த வாரத்திலிருந்து படிப்படியாக வெப்பம் குறைந்து மழை பெய்ய ஆரம்பித்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் பல்வேறு மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதம் வரை நன்றாக மழை பெய்தது. செப்டம்பர் மாதம் தொடங்கிய போதிலும் வெயில் அடிப்பதும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் வளிமண்டல கீழக்கு சுழற்சி நிலவி வருவதால் கடந்த இரு தினங்களாக வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் கூட பரமக்குடி, கமுதி உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அது போல் தென் மேற்கு பருவமழையும் விலகிவிட்டது. ஒன்று விலகினால் மற்றொன்று தொடங்கும். அதாவது வடகிழக்கு பருவமழை!
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை மையம் தகவல்களை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: காற்றின் திசை மாறுபட்டு வடகிழக்கு திசையில் காற்று வீசத்துவங்கி, வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க உள்ளது. மேலும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்தமிழகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் வாரத்தில் வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலை அதிகப்பட்சமாக 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: செப். 29ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
செப். 30 மற்றும் அக். 1ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வரும் அக். 2 மற்றும் 2ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகளில் வரும் செப். 30 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வங்கக்கடல் பகுதிகளில் இன்று வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள் இன்றும் நாளையும் தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications