காற்றழுத்தம் எங்கே இருக்கிறது? எப்போது எங்கே கரையை கடக்கிறது? வானிலை மையம் முக்கிய அப்டேட்
சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தம் எங்கிருக்கிறது. அது எப்போது கரையை கடக்கும் என்பதை பார்க்கலாம். இந்த காற்றழுத்தம் புயலாக மாறுமா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறினால் அது சென்னைக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு கணித்திருந்தது.

இந்த நிலையில் இந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதவது : வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மிக மெதுவாகவே நகர்வதால் பல மணி நேரமாக அதே இடத்தில் நிலவுகிறது.
இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென் நமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகம்- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது புயல் சின்னத்தின் பாதை வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதும் இது புயலாக உருமாறினால் சென்னை- புதுவை- தெற்கு ஆந்திரம் இடையே கரையை கடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதி கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 16ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அது போல் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி,கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
அது போல் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தற்போது கிழக்கு தென்கிழக்கில் 490 கி.மீ. தொலைவில் நிலவி வருகிறது. இது அக்டோபர் 17ஆம் தேதி காலை சென்னை அருகே கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது கரையை கடக்கும் போது மணிக்கு 35 கி.மீ முதல் 55 கி.மீ. வரை காற்று வீசும்.












Click it and Unblock the Notifications