சென்னையை புரட்டி எடுக்கும் "பேய்" மழை.. முதலில் எங்கே குறையும்.. வெதர்மேன் சொன்ன அதிமுக்கிய தகவல்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டி வரும் நிலையில், மழை எங்கே எப்போது குறையும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று இருக்கும் நிலையில், சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. இப்போது சென்னையில் இருந்து மிக்ஜாம் புயல் சுமார் 100 கிமீ தொலைவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நேற்றிரவு ஆரம்பித்த இந்த பேய் மழை தொடர்ந்து பயங்கரமாகக் கொட்டி வருகிறது. கேப் விடாமல் கொட்டி தீர்க்கும் இந்த கனமழையால் நகரில் பல்வேறு முக்கிய நீர் தேங்கியுள்ளது. மழை தொடர்ந்து பெய்வதால் தேங்கியுள்ள நீரையும் அகற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பொது விடுமுறை: இந்த மிக்ஜாம் புயல் நாளைய தினம் ஆந்திரா அருகே கரையைக் கடக்கும் நிலையில், அப்போது இந்த புயலால் தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது என்று கூறப்படுகிறது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதீப் ஜான்: இந்த புயல் காணமாகச் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் இரவு வரை மழை இருக்கும் என்றும் சில நேரங்களில் கனமழை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், புயல் அருகில் இருக்கும் வரை நிச்சயம் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு வரை மழை நின்று பெய்யும். சில நேரங்களில் கனமழையும் கூட பெய்யும். இந்த புயல் சென்னைக்கு அருகில் இருக்கும் வரை மழை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
முதலில் எங்கே குறையும்: 2015 வெள்ளத்திற்குப் பிறகு சென்னையில் ஏற்படும் மிக மோசமான மழை இதுதான். இரவு மழை குறையத் தொடங்கும். முதலில் செங்கல்பட்டில் மழை குறையும்.. அதன் பின்னர் இரவில் சென்னையில் மழை குறையும். ஆந்திராவுக்கு மிக அருகில் இருப்பதால் கடைசியாகத் திருவள்ளூரில் நள்ளிரவில் தான் மழை குறையும்.
இந்திய வானிலை மையத்தின் தரவுகள்படி மீனம்பாக்கத்தில் நேற்று 3ஆம் தேதி காலை நிலவரப்படி 80 மி.மீ மழை பெய்துள்ளது. இன்று காலை 8.30 வரை 250 மி.மீ மழை பெய்துள்ள நிலையில், இன்று காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 85 மி.மீ மழை பெய்துள்ளது. மொத்தமாக மீனம்பாக்கம் 415 மி.மீ மழை பெய்துள்ளது.
கொட்டும் மழை: அதேபோல நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்று 3ஆம் தேதி காலை நிலவரப்படி 60 மி.மீ மழை பெய்துள்ளது. இன்று காலை 8.30 வரை 230 மி.மீ மழை பெய்துள்ள நிலையில், இன்று காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 100 மி.மீ மழை பெய்துள்ளது. மொத்தமாக நுங்கம்பாக்கத்தில் 390 மி.மீ மழை பெய்துள்ளது. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 300+ மழை பெய்துள்ளது. அதேபோல 48 மணி நேரம் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் 400 மிமீ மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications