மிக்ஜாம் புயல் கரையை கடக்கும்போது சென்னை மட்டுமில்லை! இந்த மாவட்டங்களிலும் பாதிப்பு மோசமாக இருக்கும்
சென்னை: மிக்ஜாம் புயல் இப்போது தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இந்த புயல் கரையைக் கடக்கும் போது எந்த மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் விளக்கியுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 'மிக்ஜாம்' புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் இப்போது சென்னையில் இருந்து சுமார் 200 கிமீ தொலைவில் இருக்கிறது.

இதன் காரணமாக இப்போதே சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று இரவு ஆரம்பிக்கும் தீவிர மழை நாளையும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
புயல்: இந்த புயல் நாளை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை மறுநாள் டிச. 5ஆம் தேதி இது தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கரையைக் கடைக்கும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
இந்த கனமழை காரணமாகக் காற்று மட்டுமின்றி நாளைய தினம் மழையும் கூட அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலால் ஏற்படும் மோசமான பாதிப்புகளைச் சமாளிக்கத் தேவையான பணிகளைச் சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. முதலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. புயல் மோசமாக இருக்கும் என்பதால் பின்னர் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பாதிப்பு எங்கே: மேலும், இந்த புயல் காரணமாகப் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் முறையே சனி மற்றும் ஞாயிறு அட்டவணைகளில் இயங்க உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உணவைத் தரவும் பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே புயல் கரையைக் கடக்கும் போது எந்த மாவட்டங்களில் பாதிப்பு மோசமாக இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் விளக்கியுள்ளார். இது தொடர்பாக செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த புயல் வடமேற்கு திசையில் நகரும். தொடர்ந்து இது தீவிர புயலாகவும் வலுப்பெறும் சூழல் இருக்கிறது..
சென்னை மட்டுமில்லை: நாளை காலை வடதமிழகம் தெற்கு ஆந்திர கரையோ ஒட்டி நிலவக் கூடும். அதன் பிறகு கரைக்கு இணையாக நகர்ந்து 5ஆம் தேதி நெல்லூர்- மசூலிபட்டினம் இடையே கரையைக் கடக்கக் கூடும். கரையைக் கடக்கும் போது வீசும் அதிவேக காற்று குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளோம். எங்கெல்லாம் அதி தீவிர மழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
குறிப்பாகக் கரையை ஒட்டி இருக்கக்கூடிய வடமேற்கு மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும். இன்று மாலை ஆரம்பிக்கும் மழை தொடங்கும் மழை நாளை வரை தொடரும்" என்றார்.












Click it and Unblock the Notifications