சரியில்லை.. ஏதாவது பண்ணுங்க சார்.. ஸ்டாலினிடம் பேசிய எம்எல்ஏக்கள்.. ரூ.6000 அறிவிப்பின் பரபர பின்னணி
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ரேஷன் கடைகள் வழியாக ரூபாய் 6000 கொடுக்கப்பட உள்ளது. அரசின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 1 மாதமாகவே அடிக்கடி கடும் மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல், சென்னையை புரட்டி போட்டு உள்ளது. ஒரு மாத காலமாக விட்டுவிட்டு பெய்த மழை.. அதன்பின் புரட்டி போட்ட 2 நாள் மழையால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளன.

அதுவும் மாநிலத்தின் தலைநகரான சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் மழை நீர் குளம் போல் தேங்கி போக்குவரத்துக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் கடும் சவாலை ஏற்படுத்தியது. சென்னை சாலைகளை சரி செய்யவும், மழை நீர் கால்வாய்கள் மற்றும் கழிவு நீரகற்றும் கால்வாய்களை சரி செய்யும் பணிகளுக்காக மட்டும் 4,000 கோடி அளவில் திட்டங்கள் தீட்டப்பட்டன.. ஆனாலும், அந்த திட்டத்தின் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை.
மழை நீர் வெளியேறும்: எப்போதும் போல மழைக்காலங்களில் மக்கள் படும் துயரங்களை இந்தாண்டும் அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தண்ணீர் தேங்கவில்லை ; மழை பொழிவது நின்றதும் அடுத்த 10 நிமிடங்களில் மழை நீர் ஓடிவிடுகிறது என்று அரசு அதிகாரிகள் சொன்னதை வைத்து, பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு இதே தொணியில் பதில் அளித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
கவனத்துக்கு வந்த விஷயம்: ஆனால், அந்த பேட்டியை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வருவதற்குள், சென்னையில் எங்கெல்லாம் மழை நீர் கடல் போல் காட்சியளிக்கிறது ? வாகனங்கள் எங்கெல்லாம் தடை பட்டு நின்று போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது? முதல்வரின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் எந்தெந்த பகுதிகள் நீரில் மூழ்கியிருக்கின்றன? என்பதையெல்லாம் முதல்வரின் கவனத்துக்கு சிலர் கொண்டு போயிருக்கிறார்கள்.
கவனத்துக்கு போன விஷயம்: முக்கியமாக மக்கள் கோபமாக இருக்கிறார்கள். வெள்ளம் காரணமாக கடுமையாக அப்செட் ஆகி உள்ளனர். இது நமக்கு எதிராக திரும்பும். இவ்வளவு நாள் நாம் மக்களுக்கு செய்த நல்ல விஷயங்கள் எல்லாம் வீணாகிவிடும். அதனால் எதாவது செய்தே ஆக வேண்டும் என்று முதல்வரிடம் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சொல்லி இருக்கின்றனர். இதனையடுத்து சென்னை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது கோபம் கொண்டிருக்கிறார் முதல்வர்.
நிவாரணம்: இதையடுத்தே சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ரேஷன் கடைகள் வழியாக ரூபாய் 6000 கொடுக்கப்பட உள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் கொடுத்த அப்டேட் அடிப்படையில்.. மக்களை மீட்கும் வகையிலும், அவர்களின் கோபத்தை தணிக்கும் வகையிலும் ரூபாய் 6000 கொடுக்கலாம் என்ற முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளதாம்.
நிவாரண தொகை அறிவிப்பு: இதனடிப்படையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications