"ஓ இதுதான் விஷயமா.." குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அதிக மழை பெய்வது ஏன் தெரியுமா! நறுக் விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்கிறது. இருப்பினும், ஓரிரு இடத்தில் மட்டுமே மழை பெய்துவிட்டு, மற்ற இடங்களில் மழை பெய்யாமல் இருக்க என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை நம்மை வெப்பம் வைத்துச் செய்துவிட்டது. ஜூன் மாதம் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு வெப்பம் உச்சத்தில் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட 20+ இடங்களில் வெப்பம் சதமடித்தது.
அதேபோல ஜூன் மாதம் பெய்யும் சராசரி மழையைக் காட்டிலும் 22% வரை மழை குறைவாகவே பெய்திருந்தது. ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. நேற்று சென்னையில் பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது.

மழை: சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, திருவான்மியூர், மீனம்பாக்கம் எனப் பல இடங்களில் கனமழை கொட்டியது. ஒரே நாளில் வெப்பம் குறைந்து மழை கொட்டிய நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னை நகர்ப்புறங்கள் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. காலை நேரத்தில் பெய்த மழையால் சென்னை உட்பட பல 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
பல வடமாவட்டங்களில் இன்று மழை பெய்துள்ளது. இருப்பினும், மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மழை பெய்யாமல் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. அனைத்து இடங்களிலும் பெய்யாமல் எதனால் இப்படிக் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மழை பெய்துள்ளது என்பதை வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விரிவாக விளக்கியுள்ளார்.
வரும் நாட்கள்: இது தொடர்பாக அவர் கூறுகையில், "தற்போது தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் அதில் காற்றின் ஈரப்பதம் குவிவும் நிகழ்கிறது. மேலும், மத்திய பகுதிகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் காற்று திசை மாறும் பகுதி நிலவுகிறது. இது படிப்படியாக வடக்கு திசையில் அடுத்த இரண்டு நாட்களில் நகரும்.
இதனால் அடுத்து இரண்டு நாட்களுக்குத் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் லேசான முதல் இடியுடன் கூடி மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்திற்குச் சென்னை, திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். குமரிக் கடல், தமிழக கடற்கரை பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவக் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட இடங்களில் மழை ஏன்: தொடர்ந்து பரவலாக மழை பெய்யாமல் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மழை பெய்ய என்ன காரணம் என்பதை விளக்கிய அவர், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக எங்கெல்லாம் ஈரப்பதம் குவிகிறது அந்த இடங்களில் மட்டுமே மழை பெய்யும். ஈரப்பதம் எந்த இடத்தில் குவிகிறது, எவ்வளவு ஈரப்பதம் இருக்கிறது என்பதைப் பொறுத்தே மழை எங்குப் பெய்யும், எவ்வளவு பெய்யும் என்பது முடிவாகும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் பெய்யும் மழை குறித்து விளக்கிய அவர், மீனம்பாக்கத்தில் 1996க்கு பிறகு இந்தாண்டு தான் ஜூன் மாதம் அதிகபட்ச மழைப் பதிவாகியுள்ளது என்றார். அதேபோல நுங்கம்பாக்கத்தில் கடந்த 73 ஆண்டுகளில் 1996, 1991க்கு பிறகு இதுதான் மூன்றாவது அதிகபட்ச மழை இதுவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications