வெள்ளம் வந்தாலே வெள்ளச்சேரியாக மாறும் வேளச்சேரி.. அதீத மழையை தாங்கும் சக்தி இல்லாதது ஏன்?
சென்னை: சென்னையில் வெள்ளம் வந்தாலே வேளச்சேரி, வெள்ளச்சேரியாக மாறுவது ஏன் தெரியுமா? வேளச்சேரி ஏரி நிறைந்தால் அந்த தண்ணீர் வெளியேற போதிய வாய்க்கால்கள், கால்வாய்கள் உள்ளதா, வேளச்சேரி ரயில் நிலையத்தை ஒட்டிய தாழ்வான பகுதிகள் ஏன் வெள்ளத்தில் சிக்குகின்றன.. வேளச்சேரிக்கு அதீத மழையை தாங்கும் சக்தி இல்லாதது ஏன் தெரியுமா? 2023 வெள்ளம் உணர்த்திய உண்மைகளை பார்ப்போம்.
ஒரு காலத்தில் சாதாரண மழைக்கே வெள்ளத்தில் தத்தளித்து வந்த வேளச்சேரி பல கசப்பான படிப்பினைகளால் ஓரளவு பாடம் கற்றது. இதன் காரணமாக அங்கு மழை நீர் வடிகால்கள், சாக்கடை கால்வாய்கள் என எல்லாமே நன்றாகவே அமைக்கப்பட்டுள்ளன. அப்புறம் என்ன பிரச்சனை.. ஏன் 2023ல் வெள்ளம் வந்தது. பொதுவாக ஒரு உண்மையை வசதியாக நாம் மறந்துவிடுகிறோம்.. எந்த ஒரு ஏரியும் நிறையும் போது, அதற்கு வரும் அதிகப்படியான நீர் வரத்தை வெளியேற்றும் கால்வாய்கள் இருக்க வேண்டும்..

ஏரி தண்ணீரை தேக்கி வைக்க ஏரியின் பரப்பளவும் இருக்க வேண்டும். அப்படித்தான் 1980கள் வரை கால்வாய்களும் ஏரிகளும் இருந்தன. அதன்பிறகு ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் மக்கள் அடர்த்தி காரணமாக வேளச்சேரி ஏரியின் பரப்பளவு வேகமாக குறைய தொடங்கியது. 265 ஏக்கரில் இருந்து 55 ஏக்கராக சுருங்கியது. 265 ஏக்கர் ஏரி வெறும் 55 ஏக்கராக சுருங்கியதே இன்றைய நிலைக்கு மிக முக்கிய காரணம். அதாவது வெள்ளம் தேங்கும் பகுதிகள் எல்லாம் வேளச்சேரின் ஏரி பகுதிகள் ஆகும்.
அடுத்ததாக இன்னொரு பிரச்சனை வேளச்சேரி ஏரி நிறைந்தால், அந்த தண்ணீர் அப்படியே 100 அடி சாலை வழியாக உள்ள கால்வாய்கள் வழிந்து சுற்றி, அப்படியே வேளச்சேரி ரயில் நிலையம் நோக்கித்தான் வரவேண்டும். அதாவது பள்ளிக்கரணை ஏரியை அடைய வேண்டும். மடிப்பாக்கத்தையும் வேளச்சேரியையும் இணைக்கும் பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் தண்ணீர் நேரடியாக பள்ளிக்கரணை ஏரிக்கு செல்ல செல்ல வேண்டும். அதுதான் அதன் பிரதான வழியாகும்.
ஆனால் அந்த பகுதியில் உள் கால்வாய் பகுதி சுருங்கிவிட்டது மற்றும் ஏரியின் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக, அந்த தண்ணீர் 100 அடி சாலை வழியாக விஜயநகர் பேருந்துநிலையம் முதல் வேளச்சேரி ரயில் நிலையம் வரை உள்ள பகுதிகளில் தேங்கி நின்று மெதுவாக பள்ளிக்கரணை ஏரியை அடைகிறது. இதேநிலை தான் மடிப்பாக்கம் பகுதியிலும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை காரணமாக ஓரளவு மழை வந்தால் தாங்கும் வேளச்சேரி, அதிக மழையை தாங்க முடியாமல் தவிக்கிறது. அதனால் தான் மக்கள் கார்களை பாலத்திற்கு மேல் போய் நிறுத்தும் நிலை இன்று வரை தொடர்கிறது. கடந்த முறை கார்களை பாலத்தில் நிறுத்தாத அத்தனை பேரும் 50000 வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.












Click it and Unblock the Notifications