சென்னைக்கு அதிகாலையில் சர்ப்ரைஸ்.. சட்டென மாறிய கிளைமேட்.. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி
சென்னை: சென்னையில் நேற்று இரவு திடீர் மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், திநகர், நுங்கம்பாக்கம், வடபழனி, தாம்பரம் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்துள்ளது. இதனால் சென்னை நகரம் குளிர்ந்துள்ளது. கடந்த ஒருவாரமாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. ஏப்ரல் மே மாதங்களில் இருப்பது போல வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் வெளியில் சென்றாலே வியர்த்து கொட்டி வந்தது. தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியது. நேற்றும் தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதமடித்தது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் ஒருசில இடங்களில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக பெருமாம்பாலான இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து வானிலை மையம் கூறுகையில், சென்னையில் வெயில் குறைந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தது.
அதன்படி நேற்று இரவு சென்னையில் திடீர் மழை பெய்தது. நேற்று நள்ளிரவில் பெய்ய தொடங்கிய மழை அதிகாலை வரையிலும் நீடித்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. சென்னை கோயம்பேடு, பல்லாவரம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், திநகர், நுங்கம்பாக்கம், வடபழனி, தாம்பரம், சென்னை அண்ணாசலை, தரமணி, வேளச்சேரி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, கீழ்க்கட்டளை உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
விடிய விடிய கனமழை பெய்ததால் சென்னை நகரமே குளிர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இரவு பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை வரை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக சென்னை வானிலை மையம், வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். இதன் தாக்கத்தினால் வடமேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் இனி வெப்பமானது படிப்படியாக குறையும்.
மேற்குதிசை காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 26 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications