சென்னையில் இன்று கனமழை பெய்யுமா?.. மேகக்கூட்டங்கள் எங்கே இருக்கிறது? தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
சென்னை: சென்னையில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. இதன்படி காலையில் சென்னையில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்று மிதமான மழையே பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகர்கிறது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்கள் முதல் சென்னை வரை பரவலாக இந்த மாதத்தில் மழை பெய்துள்ளது. இதில் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையமும் சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தது. அதன்படியே காலையில் குளிரான சூழலில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையமும் கூறியிருந்தது. சென்னையின் திருவொற்றியூர் தொடங்கி தாம்பரம் வரையிலும் லேசான மழை பெய்தது.
சென்னை திருவொற்றியூர், மணலி, கொருக்குப்பேட்டை, காசிமேடு, பிராட்வே, தண்டையார்பேட்டை, சென்ட்ரல், எழும்பூர், திருவல்லிக்கேனி, மயிலாப்பூர், சேப்பாக்கம், புரசைவாக்கம், கோயம்பேடு, பாடி, வில்லிவாக்கம், அண்ணாநகர், அயனாவரம் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவியது. இது இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும் என்றும், நாளை, வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்திருந்தது.
இதனால் இன்று வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்று மிதமான மழையே பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகர்கிறது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், "காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலையின் கடைசி மழை பெய்கிறது. கடலை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய தொடங்கும். மேகங்கள் ஆந்திர கடற்கரையை ஒட்டி நகர தொடங்கியிருப்பதால் தற்போதைய காற்றழுத்த தாழ்வு நிலையின் கடைசி மழை இதுவாகத்தான் இருக்கும். இயல்பான மழையாகவே இது பெய்யும். காற்றழுத்த தாழ்வு சென்னை கடலோரப் பகுதிகளில் உள்ளது. இது மெதுவாக நகர தொடங்கும். காற்றழுத்த தாழ்வின் வடக்கு பகுதிகளில் மேகக்கூட்டங்கள் குவியும்" என்று வெதர்மேன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications